ரஜினியை பெரியவர் என்று விமர்சித்த விவகாரம் தொடர்பாக உதயநிதிக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள் என பல தரப்பினரும் வெகுண்டெழுந்து போராடிவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. இப்போது, நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று கருத்து தெரிவித்தார். ஆனால், இந்தக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
அடுத்த சில மணி நேரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்” என்று ரஜினியை மறைமுகமாகச் சாடினார்.
இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பிறகு ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்துவரும், கராத்தே தியாகராஜன், இதுகுறித்து உதயநிதியை சாடியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றில் விவாதத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினியைப் பற்றி உதயநிதி ஒரு ட்விட் போட்டிருப்பதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. ரஜினியைத்தான் உதயநிதி குறிப்பிட்டுள்ளார் என்று வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்து உதயநிதி ட்வீட்டில் சொன்ன பெரியவர் ரஜினி இல்லை. அவர் அப்பா ஸ்டாலின்தான். எடப்பாடியிடம் போய் தோற்றுவிட்டார். ஆரோக்கியம் இல்லாமல் இப்பவே ஸ்டாலின் ineffective ஆக உள்ளார். அவர் மனைவி இவருக்காக கோயில் கோயிலா போறார். ஆகவே தனது அப்பாவைப் பற்றி உதயநிதி கூறியிருப்பார்” என்றவர்,
இந்த ஃபோட்டோவ பாருங்க. ரஜினிக்கு சால்வை போடறார். பக்கத்தில் இருக்கும் சின்ன பையன்தான் உதயநிதி. அவர்களின் குடும்பத்தில் ஏதோ சண்டை போலிருக்கு. அதான் அப்பாவை பத்தி இப்படி பெரியவர் வீட்ல இருங்கனு ட்வீட் செய்துள்ளார்” என்று சாடியுள்ளார்.�,”