தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 2 ஆம் நாள் கூட்டப்பட இருக்கிறது.
இதுகுறித்து இன்று (ஜனவரி 21) தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2021 பிப்ரவரி 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியிருக்கிறார். அன்றே காலை 11 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும். தமிழ்நாடு அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை புதிய அரசுதான் தாக்கல் செய்ய வேண்டும்.இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களுக்கான அரசு ஊழியர்களின் சம்பளம், அரசின் நிர்வாக செலவுகளுக்கான இடைக்கால பட்ஜெட்டை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார். அத்தோடு இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவுறும். சில நாட்களே நடக்கும் இந்த சட்டமன்றத் தொடரே இந்த ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடராக இருக்கும்.
**-வேந்தன்**
�,