முதல்வர்கள் மாநாட்டை கூட்டச் சொல்லும் ராமதாஸ்

Published On:

| By Balaji

காவிரி-கோதாவரி திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான காவிரி நீர்ப்பகிர்வு சிக்கல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் எந்தத் தடையும் இல்லாமல் தண்ணீர் கிடைக்க காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டும்தான் தீர்வு ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் 3000 டிஎம்சி தண்ணீர் ஓடுகிறது. அவற்றில் 1,100 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 1,000 டிஎம்சி நீரை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக காவிரியில் இணைப்பதுதான் இந்தத் திட்டமாகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த நிதின்கட்கரி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தைப் பார்த்தபோது, நடப்பாண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தத் திட்டம் குறித்து பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்பதும், மத்திய அரசின் உயர்மட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படுவதில்லை என்பதும் மிகவும் கவலையளிக்கின்றன. காவிரி-கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி-கோதாவரி இணைப்பின் முதல் கட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்துப் பேச தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால், அதற்குள்ளாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து விட்டதால், அந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர்,

காவிரி-கோதாவரி இணைப்பு எனும் கனவுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.60,000 கோடி செலவாகும் என்று இரு ஆண்டுகளுக்கு முன் மதிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறினால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து விடும் என எச்சரித்தார்.

மேலும், “காவிரி-கோதாவரி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சத்தீஸ்கர், ஒடிஷா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தகட்டப் பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி-கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share