திமுக கூட்டணி தொடருமா? நாளை காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் இப்போது வரை இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்க மறுத்து வருவதால் அடுத்த கட்ட திட்டம் பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறது.

பிப்ரவரி 25 ஆம் தேதி திமுக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ராகுலுக்கு நெருக்கமான அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கே.எஸ். அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

திமுக 15 தொகுதிகளில் ஆரம்பித்தது. காங்கிரஸோ கடந்த முறை நின்ற 41 தொகுதிகளிலாவது நிற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. உம்மன் சாண்டியும், சுர்ஜேவாலாவும் இதுகுறித்து ராகுல் காந்தியிடம் தெரிவித்தபோது, “நாம் 41 தொகுதிகளில் உறுதியாக இருப்போம். இடங்கள் குறைந்தால் தேசிய அளவிலும் பல்வேறு மாநிலங்களிலும் அது எதிரொலிக்கும்”என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அறிவாலயம் சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ‘41 தொகுதிக்கு குறைவாக இருந்தால் கூட்டணியில் தொடர்வதைப் பற்றி யோசித்து சொல்கிறோம்” என்று திமுக குழுவினரிடம் நேருக்கு நேராக சொல்லிவிட்டு வந்தார்.

இந்த பின்னணியில்தான் காங்கிரஸ் தமிழக தலைமை இன்று தமிழக காங்கிரஸின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “நாளை (04.02.21) வியாழக் கிழமை காலை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்க விரும்புகிறார். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்” என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மிகக் குறைவான இடங்களே ஒதுக்கப்படுவதால், கூட்டணியில் தொடர்வது பற்றி நாளை காலை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கச் சொல்லி தினேஷ் குண்டுராவுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படிதான் நாளை தினேஷ் குண்டுராவ் இந்த கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தின் முடிவில் தீர்மானிக்கப்படும் என்கிறார்கள் சத்தியமூத்தி பவன் வட்டாரத்தில்.

**-ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share