7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 400 பேர் வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதனால் நீட் தேர்வில் வெற்றிபெற்றும் தங்களுக்கு மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி, இச்சட்டத்திற்கு எதிராக தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இதுபோல இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூக ரீதியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார ரீதியாகவும், இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கத்தக்கதல்ல என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதாகவும், , இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டது. 15 நாட்களில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
*எழில்*�,