பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தடையை மீறி சென்று திமுக எம்பி கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய திமுக வலியுறுத்தி வந்தது.
பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தும், அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகி கைதுடன் முடித்து விடக் கூடாது. இதில் தொடர்புள்ள அதிமுக மேல்மட்டத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
எனினும் அறிவித்தபடி, கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தக் கனிமொழி எம்.பி. இன்று (ஜனவரி 10) காலை சென்று கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி செல்ல அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி. உட்பட திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அதோடு ஆர்ப்பாட்டத்துக்கு வரும் திமுகவினரை பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தடுத்து நிறுத்துவதாகக் கனிமொழி கூறியுள்ளார். “பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான செயலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியில், நான் இபிஎஸ் அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டேன். இவ்விவகாரத்தில் மூத்த தலைவர்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்று கவலைப்படுகிறார்களா? அவர்கள் நிரபராதிகள் என்றால் அரசு ஏன் பயப்படுகிறது?” என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து போலீசாரின் தடையை மீறி பொள்ளாச்சி சென்று கனிமொழி உட்பட திமுகவினர், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் சிபிஐ விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தைத் தடுத்தால் தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,”