கல்பாக்கம் பணிக்கு மும்பையில் தேர்வு நடத்தப்படுவதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் சில பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் இருப்பவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வியப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங்கிற்கும் மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் இன்று (ஜனவரி 3) கடிதம் எழுதியுள்ளார். இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்று அவர் வேதனை தெரிவித்தார்.
பாலின நிகர் நிலையைப் பிரதிபலிக்கிற ஊழியர் உள்ளடக்கத்தை உருவாக்க அரசு முனைப்போடு இருக்கிறது; பெண் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். கைம்பெண்கள், மண முறிவு பெற்ற பெண்கள், சட்டரீதியாக கணவர்களைப் பிரிந்து மறு மணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த மக்களவை உறுப்பினர்
எனினும் ஒரே தேர்வு மையம், அதுவும் நெடுந்தொலைவில் எனும் போது அது பாலின நிகர் நிலை எண்ணமற்றதாகவே இருக்கிறது. எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும். எனது நியாயமான கவலைகளை ஏற்று உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “ஏற்கனவே சி.ஆர்.பி.எப் நடத்துகிற துணை மருத்துவப் பதவிகளுக்கான தேர்வு மையங்கள் 9 ல் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை என்று அரசுக்கு கடிதம் எழுதினேன். விண்ணப்பங்களைப் பொருத்து பரிசீலிப்பதாகப் பதில் சொன்ன அரசாங்கம் இப்போது தமிழகத்தில் மையம் அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்துள்ளது. மையங்களை அறிவிக்கும் போதே கவனம் எடுக்காவிட்டால் எப்படி விண்ணப்பங்கள் உரிய எண்ணிக்கையில் வரும்? இப்படி தமிழகத்திற்கு தொடர்கிற பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,”