அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். கடந்த சில நாட்களாகவே ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டபோதும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களால் தங்களது இயல்பு வருமானத்துக்குத் திரும்ப இயலவில்லை.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 3 மாதங்களாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை.
இதனால், ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையே மிகப்பெரிய கேள்வி குறியாக மாறியிருக்கிறது.
வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று யோசனை தெரிவித்துள்ளார்.
**-வேந்தன்**�,