ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை நேற்று (ஜூலை 20) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த முடியவில்லை. கொரோனா பரவல் குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாக பணியில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று விரைவில் ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அது சரி செய்யப்படும். கல்வி சேனல்களை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தேர்வும் நடத்தப்படும். சிறப்புத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதல்வரிடம் ஆலோசனை பெற்றுச் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை (ஜூலை 22) மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிகளில் இடைநிற்றல் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். திமுக அளித்த ஏழு முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாகும். எனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாணவர்கள் இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
**-பிரியா**
�,