இலங்கை கடற்படையினரால் 23 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன், சிவகுமார் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகில் 23 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுகளைப் பறிமுதல்செய்து, படகில் இருந்த 23 மீனவர்களையும் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்காணப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று(அக்டோபர் 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருபத்து மூன்று தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரும் கோடியக்கரை பகுதியில் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கைப்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து அவர்கள் இலங்கை எல்லையில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தபோது கைதுசெய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். சிங்கள கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பே வெகு சில கிலோ மீட்டர்கள்தான். சர்வதேச கடல் எல்லையைக் கூட வரையறுக்க முடியாத அளவுக்கு அப்பகுதியில் கடற்பரப்பு குறுகியதாக உள்ளது. அதனால், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைவதும் இயல்பானதுதான்.அத்தகைய சூழல்களை கைது இல்லாமல் மென்மையாக கையாள வேண்டும் என்று பன்னாட்டு அமைப்புகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்திருப்பதை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்.
கொரோனா பரவல் காலத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான அத்துமீறல்களை இலங்கைக் கடற்படை சற்று கைவிட்டிருந்தது. இப்போது மீண்டும் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டன. 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அடுத்த சில வாரங்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்து விடும். மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை மீட்பது சாத்தியமில்லை என்பதால், அந்தப் படகுகளை நம்பியிருக்கும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
இத்தகைய பாதிப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்கும் கடமை ஒன்றிய அரசுக்கு உண்டு.
எனவே, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்யும் வகையில் இந்த சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக வங்கக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளைக் கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் மூன்று படகுகளை மீட்டு வருவதற்கும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**-வினிதா**
�,”