மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்: ஓபிஎஸ்

Published On:

| By Balaji

மத்திய அரசுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு தருகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து திட்டங்களுக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி குற்றம்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “எங்களைப் போன்ற தொழில் மயமான மாநிலத்திற்கு, சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். எனவே, இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க தலைமைச் செயலாளரின் கீழ் உள்ள அதிகாரிகள் குழு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், “தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுப் பணி, விரிவுபடுத்தும் பணி, பராமரிப்புப் பணி போன்றவை மத்திய அரசின் நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்தப் பணிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் தெரிவிப்பதும், ஒத்துழைப்பு தருவதாக முதலமைச்சர் பதிலளிப்பதும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது மாநில அரசின் நிதி, மத்திய அரசின் வரிப் பகிர்வு, மத்திய அரசின் நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகும்.

அரசியலைப் புறந்தள்ளி விட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால் தான், பல்வேறு சாலை வசதிகள், சுகாதாரத் திட்டங்கள், ஒரேயாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.

இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டு. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்தத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கிறார்.

இது ஓரளவுக்கு ஆறுதலை அளிக்கிறது என்றாலும், இதுபோன்ற விமர்சனங்கள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share