ேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று (பிப்ரவரி 20) மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக அதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தைத் தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. கள்ள ஓட்டுக் கழகங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வார்டு எண் 49 -ல் உள்ள வாக்குச்சாவடிகள் 253, 254 -ல் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. கையில் வைத்துள்ள மையை அழித்து, கள்ள ஓட்டுக்கள் ஏராளமாகப் போடப்பட்டுள்ளன’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அந்த வார்டில் போட்டியிட்ட மநீம வேட்பாளர், மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வார்டு எண் 49 -ல் உள்ள வாக்குச்சாவடிகள் : 253, 254 -ல் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. கையில் வைத்துள்ள மையை அழித்து, கள்ள ஓட்டுக்கள் ஏராளமாக போடப்பட்டுள்ளன. இதை எதிர்த்து அந்த வார்டில் போட்டியிட்ட மநீம வேட்பாளர், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியிடம் (1/2) pic.twitter.com/vWZg7VHuuH
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 20, 2022
இந்நிலையில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்திட வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாய் மற்றும் கண்களில் கருப்புத் துணி கட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமாரைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி மனு கொடுத்தனர்.
அதில், “கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்தான உரிய விளக்கத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
சென்னையில் வார்டு எண் 173ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச் சாவடிக்குள் வர அனுமதிக்காமல் அப்பட்டமான விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்களை (கையெழுத்து, ரெஜிஸ்டர், சிசிடிவி காட்சிகள்) வேட்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விவரங்களை பூத் வாரியாக வெளியிட வேண்டும்.
தமிழகம் எங்கும் நடைபெற்ற ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருள் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத பட்சத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு கொடுக்கும்போதும், கட்சி நிர்வாகிகள் சிலர் கண்களை கறுப்புத்துணியால் கட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**