சிஏஏ, 8 வழிசாலை திட்டம் நிறைவேற்றப்படாது: திமுக புதிய வாக்குறுதி!

Published On:

| By Balaji

திமுக தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள் மற்றும் புதிய வாக்குறுதிகளைச் சேர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

தேர்தல் கதாநாயகன் என்றழைக்கப்படும் திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், 505 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பெண்களுக்கு 12 மாத பேறுகால விடுப்பு, ஆட்டோ வாங்க 10 ஆயிரம் ரூபாய் மானியம், கலைஞர் உணவகம் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனிடையே, கடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஒரு கோடி கையொப்பங்களைப் பெற்று திமுக குடியரசுத் தலைவரிடம் அளித்தது. ஆனால் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சிஏஏ எதிர்ப்பு குறித்து எதுவும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்து அறிவிப்பு வெளியிட்டார் முக ஸ்டாலின்.

அதில், “2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும், வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:

“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கையிலிருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ பொறுத்தவரை, அதைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி – நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று – அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திமுக கொடுத்திருக்கிறது.

அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு – அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share