சென்னைக்குத் தொலைநோக்குத் திட்டம் தேவை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

Published On:

| By Balaji

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்கும் என்று ஒன்றிய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், நவம்பர் 13ஆம்தேதி பார்வையிட்டார். குறிப்பாக அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பின்னர் போரூர் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு நிச்சயம் வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அண்மையில் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த அடிப்படையில் தேவையான உதவிகளை ஒன்றிய அரசு தற்போது செய்து கொண்டிருக்கிறது. அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்தி்ர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழகத்துக்குச் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அப்போது மேலும் தேவைப்படும் உதவிகளை தமிழகத்துக்குச் செய்ய ஒன்றிய அரசு தயாராக உள்ளது என அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்று குறிப்பிட்ட முருகன் தொடர்ந்து பேசுகையில்,

“பல பத்தாண்டுகளாக மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதே போன்றுதான் நீடித்து வருகிறது. அதற்கு தொலைநோக்குடன் கூடிய நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டில் அவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்ட போதிலும், தண்ணீர் அனைத்தும் வீணாகி கடலில் கலந்ததால் அடுத்த இரண்டு மாதங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில்கூட அதிகளவு தண்ணீர் வந்தும் அதைச் சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ நம்மிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

எனவே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும், அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தவும் ஏதுவாக தமிழக அரசு தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும்.. பல இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது, அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத்தால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதால், இதுவரை பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக அதை செய்துகொள்ள வேண்டும். இயற்கை பேரிடரால் விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில்கொண்டே, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமது கனவுத் திட்டமாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். அத்தகைய திட்டத்தை தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத விவசாயிகள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் கூறினார் முருகன்.

வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய குழு நிச்சயம் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று மன்னார்குடியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share