லஞ்சம் கொடுத்து கடன் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2014-19 காலகட்டத்தில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவரின் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் சக்தி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை முறையாக பரிசீலிக்காமல் 20 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளார் வங்கி மேலாளர் தியாகராஜன். இதற்காக தியாகராஜனுக்கு 2.69 லட்சம் ரூபாயை அமெரிக்கா சென்றுவர ராமச்சந்திரன் லஞ்சம் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வங்கி மேலாளர் தியாகராஜன், முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், அவரது மகனும் கல்லூரி தலைவருமான ராஜசேகர் ஆகியோர் மீது 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணையில் இருந்துவந்தது.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று (மார்ச் 4) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், ராஜசேகர், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிக்கப்பட்டன. ராமச்சந்திரன், ராஜசேகர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அறக்கட்டளைக்கு 15.20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
**எழில்**�,