கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!

Published On:

| By Balaji

பிரதமர் நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், முதலில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்தது.

இந்த சூழலில் இன்று பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த நமது மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவாகத் தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எவ்வாறு பணியாற்றினர் என்பதை உலகம் அறியும்.

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்” என்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று அதிகாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் பி. நிவேதா தடுப்பூசி செலுத்தினார்.

நேற்றுவரை முன்கள பணியாளர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share