Wதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரை விடுதலை செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தன் வீட்டில் வேலை செய்த, கேரளாவைச் சேர்ந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகிய ஏழு பேர் மீது ஆள் கடத்தல், பாலியல் வன்முறை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னீர் செல்வம் உயிரிழந்தார்.
ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால், சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பில் ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 42,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.
10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், ஜெய்சங்கர் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கில் இன்று (ஜூலை 31) தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், இருவருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
**எழில்**�,