திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 72 மணி நேரம் கெடு விதிப்பதாக கூறியிருந்த நிலையில், அவரின் சொந்த ஊரான கரூரை கூட தாண்ட முடியாது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, மாநிலங்களும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலால் வரியை மத்திய அரசு பலமுறை உயர்த்திய போது மாநிலங்களுடன் ஆலோசிக்கவில்லை. எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியது.
தற்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியைக் குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமே இல்லை” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை கூறுகையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதுபோன்று சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அண்ணாமலை கரூரை கூட தாண்ட முடியாது என்று எச்சரித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் பகுதியில் நேற்று இரவு , திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “கர்நாடகாவில் இருக்கும் போது காவிரி நீரை விட கூடாது என்று சொன்ன அண்ணாமலை , தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ளார். இவர் தமிழகத்துக்கு என்ன செய்ய போகிறார். மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார்.
இது திமுக ஆட்சி. இந்த சவாலுக்கு எல்லாம் பயப்படமாட்டோம். என்ன தைரியம் உங்களுக்கு. கர்நாடக அரசுக்கு சல்யூட் அடிக்கும் அண்ணாமலை, கரூரை கூட தாண்ட முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
**- பிரியா**