நீதிபதிகள் நியமன கமென்ட்: குருமூர்த்திக்கு திமுக எதிர்ப்பு!

Published On:

| By Balaji

சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடந்த துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், தற்போது துக்ளக் இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய பேச்சு பல்வேறு திசைகளிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அரசியல் ரீதியாக அமமுகவை சாக்கடை என்று பேசிய குருமூர்த்தி திமுக வை எதிர்ப்பதற்கு அமமுகவையும் அதிமுக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இதற்கு அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலளித்தார். குருமூர்த்தி தன்னை பிதாமகன், சாணக்யன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். வேண்டுமென்றால் அவர் டிரம்புக்குப் போய் ஆலோசனை கூறட்டும். யாகாவராயினும் நா காக்க வேண்டும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.

இந்நிலையில், அதே கூட்டத்தில் நீதிபதிகளைப் பற்றி குருமூர்த்தி பேசியதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. “உச்ச நீதிமன்றம் லஞ்சத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு கருணை காட்டும்போது எப்படி லஞ்சம், ஊழல் இந்த நாட்டில் ஒழியும்? காரணம் என்னவென்றால், இப்போது உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யாருடனோ யார் மூலமோ போய் யார் காலையாவது பிடித்துதான் நீதிபதிகள் பல பேர் வந்திருக்கிறார்கள்.தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுமாதிரி ஒரு நிலைமை இருக்காது” என்று பேசினார்.

இந்நிலையில், துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு!” என்று திமுக சட்டத்துறைத் தலைவரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டயக்கணக்காளரான குருமூர்த்தி, பொருளாதார அறிஞராக முன்னிறுத்தப்படுவதும், அதன் அடிப்படையில் அவர், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் இயக்குநராக்கப்பட்டதும் அத்துறை சார்ந்த அறிஞர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் இப்போது நீதித் துறை குறித்தும் கருத்துச் சொல்லியிருக்கிறார். சட்டத் துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாத அவர், சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்விருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார்.

2017-ல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும்கூட அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர்களால் அது உரிய முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் போய்விட்டது.

இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு.

நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய – மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர். சட்டமியற்றும் அமைப்பு, நிர்வாக அமைப்பு, நீதித் துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இதற்கு அடிப்படையாக இருக்கிறது.

சட்டம் படித்தவர்கள் என்றால் இந்த அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்கும். ஆடிட்டர் ஒருவருக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயித்திருக்கிறது. அதன்படிதான், நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். குருமூர்த்தி, அரசமைப்புச் சட்டத்தையும் தாண்டி தகுதி என்று எதைச் சொல்ல வருகிறார்? ”என்று கேள்வி எழுப்பியுள்ளார் சண்முக சுந்தரம்.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share