திமுக சொன்ன எண்ணிக்கை: அதிர்ச்சியில் மார்க்சிஸ்ட் !

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சீட்டுகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே மமக சார்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அறிவாலயத்தில் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 என்ற குறைந்த அளவே இடங்கள் ஒதுக்குவதாக ஸ்டாலின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் சபரீசனோடு பேசிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் கொடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் திமுகவின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும், ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ.வேலு மார்க்சிஸ்ட் கட்சி மாநில நிர்வாகிகளோடு பேச்சு நடத்தியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை பற்றி மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“மாநிலக் குழு நிர்வாகிகளுடன் பேசிய எ.வ. வேலு, வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள்தான் தரமுடியும் என்று சொல்ல பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ந்துவிட்டார்கள். என்ன இவ்வளவு குறைவாக சொல்லுகிறீர்கள் என்று தோழர்கள் உரிமைக் குரல் எழுப்ப, அடுத்தகட்டமாக 5 தொகுதிகள் என்று வந்து நின்றிருக்கிறார் எ.வ.வேலு. இதைக் கேட்டதும் பாலகிருஷ்ணன், ‘இந்த எண்ணிக்கையை நான் மாநிலக் குழுக் கூட்டத்தில் கூட சொல்ல முடியாது. அவ்வளவு குறைவா இருக்கு. மாநிலக் குழு உறுப்பினர்களும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’என்று கூறியிருக்கிறார். ‘சரி நீங்க பேசிட்டு சொல்லுங்க’ என்று வேலுவும் கூறியிருக்கிறார். திமுக தெரிவித்த தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முறைப்படி விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்கிறார்கள்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி 12 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 இடங்களிலும் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share