அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இரு கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, பிற கட்சியினர் இடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும் வானளாவிய அதிகாரம் படைத்த முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான பி.ஹெச். பாண்டியனின் சிலை திறப்பு விழா ஜனவரி 4 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் நடந்தது.
அன்று காலை சென்னையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாகவே தூத்துக்குடி புறப்பட்டு அங்கிருந்து ஒன்றாகவே சிலை திறப்பு நிகழ்வுக்கு திறந்த ஜீப்பில் வந்தனர்.
பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் முரண்பாடுகள் மூண்டுகொண்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில்… இருவரும் ஒரே வாகனத்தில் இரட்டை இலையை காட்டியபடி வந்த நிகழ்வு அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன் மாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி என்னும் கிராமத்தில் பி.ஹெச். பாண்டியன் சிலை திறப்பு விழா முடிவடைந்த பின்னர் நேற்று மாலை முதல்வரும் துணை முதல்வரும் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ வான முருகையா பாண்டியன் இல்லத்திற்கு சென்றனர்.
உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுத்து வரும் முருகையா பாண்டியனை சந்திக்க இருவரும் அங்கே சென்றபோது அவர்களோடு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உதயகுமார், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் முருகையா பாண்டியனை நலம் விசாரித்துவிட்டு அவரது வீட்டில் காபி,சிற்றுண்டி சாப்பிட்டபோது தலைவர்கள் மத்தியில் தென் மாவட்ட நிலவரம் பற்றியும் தேர்தல் கூட்டணி பற்றி பொதுவாக பேச்சு எழுந்தது.
அப்போது கேபி முனுசாமி, ‘பாஜக கூட்டணி நமக்கு தேவை இல்லைங்க. அவங்களுக்கு தான் நம்ம தேவை.’ என்று ஆரம்பித்து வைக்க இபிஎஸ் ஓபிஎஸ் முன்னிலையிலேயே மற்ற பலரும்… ‘பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்… சிறுபான்மையினர் ஓட்டுகள் திமுகவுக்கு என்றைக்கும் முழுமையாக சென்றதில்லை. நாம் பாஜகவோடு இருப்பதால் மட்டுமே சிறுபான்மையினர் ஓட்டுகள் நமக்கு வர மறுக்கின்றது. எனவே பாஜக கூட்டணியை தவிர்த்துவிட்டு தைரியமாக தேர்தலை சந்திப்போம். இதை நீங்கள் இருவரும் சென்னை வரும் அமித் ஷாவை சந்தித்து சொல்லிவிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்தை பார்க்க… ‘கட்சியில எல்லாரும் இப்படி நினைச்சீங்கன்னா கட்சி முடிவு தான் நம் முடிவும்’ என்று பன்னீர் செல்வமும் அவர்களுக்கு பாசிட்டிவ் ஆகவே பதில் சொல்லியிருக்கிறார்.
கடந்த நவம்பர் 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அவருக்குப் பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி தொடர வேண்டும் என்று கூறி வைத்தார்.
இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரின் முன்னிலையிலும் பாஜக கூட்டணி வேண்டாம் என்று அமித்ஷாவிடம் எடுத்துச் சொல்லுங்கள் என கூறியதுதான் அதிமுகவின் டாப் லெவலில் இப்போது விவாதம் ஆகி வருகிறது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு எதிரான நிலை எடுத்திருப்பதாகவும், ஓ.பன்னீர் பாஜகவுக்கு சாதகமான நிலை எடுத்திருப்பதாகவும் கட்சிக்குள்ளேயே ஒரு கருத்து இருக்கிறது. இதற்கிடையில் அதிமுகவின் பொதுக்குழு ஜனவரி 9 ஆம்தேதி கூடும்போது அதில் அம்பாசமுத்திரத்தின் அலை அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிந்த அடுத்த சில நாட்களில் அமித் ஷா சென்னை வருவதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
**ராகவேந்திரா ஆரா**
�,”