வேளச்சேரியில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவில் 548 பேரில் 186 பேர் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி தொகுதி, சீதாராம் நகர் முதல் தெருவில் உள்ள டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 92-வது எண் ஆண் வாக்குச்சாவடியில் இருந்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, அரசியல் கட்சியினர் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, வேளச்சேரி தொகுதியின் 92ஆம் எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப்பதிவு வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி நேற்று(ஏப்ரல் 17) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 548.ஆனால், 186 வாக்குகள் மட்டுமே பதிவாகின
காலை 10 மணி வரை 82 வாக்குகள், 12 மணிவரை 138 வாக்குகள் பதிவாகின.பின்பு, பிற்பகல் 2 மணிக்கு 157, 4 மணி வரை 170 வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதியாக இரவு 7 மணி வரை 186 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீலிடப்பட்டு, மண்டல அலுவலர் கண்காணிப்பில் வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 6ஆம் தேதியன்று வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் கருப்பு மை வைக்கப்பட்டதால், நேற்று நடந்த மறு வாக்குப்பதிவின்போது வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மொத்தம் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,