12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ரூ.12,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப்படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு தனது இணைய தளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “இதற்கு சூழல் தாக்க மதிப்பு கட்டாயமல்ல என்ற ஓட்டையைப் பயன்படுத்தி ஐ.ஆர்.சி. வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து டெண்டர் விடப்பட்டுள்ளன. சாலைத் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில்கொள்ளாமல் டெண்டர் விடுவது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.12,000 கோடி திட்டம் மதிப்பிலான பணிகளுக்கு எப்படி கணக்கிட்டாலும் மிகக் குறைந்தபட்சமாக சல்லிகள் தேவை மட்டும் 59 கோடி கன அடிகள் இருக்கும். அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அந்த உடைக்கப்பட்ட பாறைகளைப் பரப்பினால் அதன் உயரம் 54 அடிகளுக்கும் மேலிருக்கும். சுமார் 20 லட்சம் லாரிகள் கொள்ளவுள்ள இந்தக் கற்களின் தேவைக்கு எத்தனை மலைகளையும், குன்றுகளையும் பிளக்கப் போகிறார்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இதைத் தவிர எல்லா சாலைப் பணிகளையும் முடிக்க 45 கோடி கன அடி இயற்கை மண் தேவைப்படும். அதோடு மணல் பயன்பாடு 6 கோடி கன அடி என மதிப்பிடப்படுகிறது. தேவைப்படும் மணலுக்கு ஆறுகளோ இல்லை. எம் சாண்ட் என்ற பெயரில் மீண்டும் மலைகள் நாசம் செய்யப்படப்போகின்றன என்று குறிப்பிட்ட அழகிரி,
மேலும் அதை போன்று இந்தத் திட்டத்துக்கான சிமென்ட் பயன்பாடு சுமார் 7.5 லட்சம் டன். அதாவது சுமார் 1.5 கோடி மூட்டைகள் என்று மதிப்பிடப்படுகிறது. சாலை பணிகளுக்கு இதைத் தவிர 7 லட்சம் டன் தார் தேவைப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கும் என்பதை கணக்கிட்டால் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இந்தத் திட்டத்தின் அளவை பார்க்கிறபோது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனால்தான் சுற்றுச்சூழல் வழிகாட்டும் நெறிமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்து இந்த டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
மேலும், “கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் மீண்டிடாத நிலையில் தமிழக அரசின் நிதி நிலைமை கடன் சுமையிலும், பற்றாக்குறையிலும் அதலபாதாள நிலையிலிருக்கும்போது ரூபாய் 12,000 கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா என்று மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. கொரோனா, பொருளாதார மீட்புக்கு முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்காமல் நெடுஞ்சாலைத் திட்டங்களை கோடிக்கணக்கான ரூபாயை விரயம் செய்வதில் தமிழக அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் விடுபட்டு சகஜநிலை திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்குட்படாமல் நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 12,000 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்ற ஒன்று. இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டிருக்கிறது என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, இன்றைய சூழலில் ரூபாய் 12,000 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து அந்த நிதியைக் கொண்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,