நடப்பு நாடாளுமன்ற மக்களவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே வாக்கில் நிறைவடையும் நிலையில்… அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024இல் நடைபெற வேண்டும் என்பதே தற்போதைய கணக்கு.
ஆனால் பாஜகவின் பல்வேறு மாநிலங்களை ஒட்டிய திடீர் அணுகுமுறை மாற்றங்கள், மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம் தீட்டப்படுகிறதோ என்ற கேள்வியை காங்கிரஸ் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்..
வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது இன்று வரைக்கும் ஒரு தெளிவான நிலைக்கு வரவில்லை.
அண்மையில் பிரசாந்த் கிஷோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அடுத்த சில தினங்களில் சரத்பவார் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
வலிமையான அமைச்சராக கருதப்படும் அமித்ஷாவிடம் கூட்டுறவுத்துறை ஒப்படைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் கூட்டுறவு வங்கி ஊழலில் சரத்பவாருக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் வர உடனடியாக சரத்பவார் பிரதமரை சந்திக்கிறார்.
இப்படி எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஒருங்கிணைவையும் பாஜக பல்வேறு தந்திரங்கள் மூலம் தடுத்து நிறுத்துகிறது.
இப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சோனியாகாந்தியை சந்தித்திருக்கிறார். இன்னும் பல தலைவர்களை அவர் சந்திக்கிறார். எனினும் பாஜகவுக்கு எதிரான காங்கிரசை உள்ளடக்கிய மாநிலக் கட்சிகளின் மெகா கூட்டணி என்பது இன்னும் தொலைதூர புள்ளியாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான் 2024 வரை எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் மக்களவைத் தேர்தலை சுமார் ஒரு வருடம் முன்னதாகவே நடத்துவதற்கு பாஜக திட்டமிடுவதாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல்கள் வந்திருக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை மாற்றம், தமிழக பாஜக தலைவர் மாற்றம், அதைத் தொடர்ந்து
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா மாற்றம் என ஒவ்வொரு மாநிலமாக பாஜக தனது தேர்தல் வியூகத்தை வகுக்க தொடங்கிவிட்டது.
அதன் ஒரு படியாகத்தான் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அழைத்து அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுகவின் உட்கட்சி பிரச்சினைகளை செட்டில் செய்து வலிமையான அதிமுக உருவெடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் வியூகத்தை வேகமாக வகுத்து வரும் பாஜக எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு க்கு போதிய அவகாசம் கொடுக்காமல் மக்களவைத் தேர்தலை விரைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு இந்த தகவல் கிடைத்தது ஒட்டி தான் காங்கிரஸ் தரப்பிலும் வேகவேகமாக கூட்டணி வியூகங்கள் அமைக்க வேலைகள் நடந்து வருகின்றன” என்கிறார்கள் அந்த காங்கிரஸ் புள்ளிகள்!
**ஆரா**
�,”