ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏப்ரல் 26ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் இது தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பிரதிநிதி கனிமொழி, ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் அனுமதி அளிக்கலாம்” என்று தெரிவித்தார். திமுக கூட்டணிக் கட்சிகளும் இதை ஆமோதித்தன.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ தமிழக காபந்து அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.கழகம், கொரோனா இரண்டாவது அலை பரவலின் வேகமும் அது ஏற்படுத்தும் விபரீத தாக்கமும் பொதுமக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேறு எந்த நோக்கத்திலும் ஆலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது.
ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாட்டைத் தவிர வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய தமிழக அரசு நிர்வாகத்துடன் தூத்துக்குடி பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தி.மு.கழகம் வலியுறுத்தியது. இவற்றைத் தமிழக காபந்து அரசு ஏற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த வகையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற அடிப்படையில் திருச்சி பெல் நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. அவர்கள் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிர் காக்க எந்தெந்த வகையில், தமிழ்நாட்டின் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜனை விரைந்து பெற முடியுமோ அதற்கான முயற்சிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது தி.மு.க”என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் மேலும்,
“உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து, அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்துக் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும்.
ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்”என்று கோரியுள்ளார் ஸ்டாலின்.
மேலும், “ ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. தி.மு.க. அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும்”என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர்.
**-வேந்தன்**
�,”