இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் 15-18 வயதுக்குட்பட்ட ஒரு கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் கடந்த 3ஆம் தேதி முதல் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரியவர்களை விட சிறியவர்கள் ஆர்வமாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன்னுடைய ட்விட்டரில்,” தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இளம் இந்தியர்களிடையே அபார உற்சாகம் உள்ளது. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து மூன்று நாட்களில், 1.28 கோடி சிறுவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில்,” கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் இளம் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். 3 நாட்களில் 1 கோடி தடுப்பூசி போடுவது நமது இளைஞர்களின் பொறுப்புணர்வு மற்றும் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
**அதிக தடுப்பூசி**
இந்தியாவில், நேற்று மாலை நிலவரப்படி 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக தடுப்பூசி போட்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்து உள்ளது.
ஆந்திராவில், மொத்தமுள்ள 15-18 வயதினரில் 39.8% பேர் முதல் டோஸை போட்டுக்கொண்டு உள்ளனர். இதற்கடுத்தபடியாக, இமாச்சல பிரதேசத்தில் 37 சதவிகிதமும், குஜராத்தில் 30.9 சதவிதமும் செலுத்தப்பட்டு உள்ளன.
தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டையூ-டாமன் யூனியன் பிரதேசத்தில் 28.3 சதவிகிதமும், கர்நாடகாவில் 25.3 சதவிகிதமும், உத்தரகாண்டில் 22.5 சதவிகிமும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் முறையே 20.6, 20.5 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 12 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”