எதிர்க்கட்சிகளைக் கண்காணிக்க மட்டுமே உளவுத் துறை!

Published On:

| By Balaji

ஊரடங்கு காலத்திலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் சம்பவங்கள் நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் நேற்று (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கையில்,

“சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள முடுக்கூரணி என்னும் ஊரில் ராணுவ வீரர் ஒருவரின் தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோர் கொலை செய்யப்பட்டு – அவர்களின் ஏழு வயதுக் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மற்றும் காலில் கிடந்த கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி (ப்ரீசர் பாக்ஸ்) இல்லாததால், லடாக் பகுதியில் இருந்து அவசரமாகச் சிவகங்கை திரும்பிய ராணுவ வீரர் ஸ்டீபன் இறந்து போன தனது தாய் மற்றும் மனைவி ஆகியோரின் முகங்களைக்கூடப் பார்க்க முடியாமல் துயரம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. கொரோனா வைரஸைவிடக் கொடுமையான சூழலை, நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ள ஒரு ராணுவ வீரருக்கு அதிமுக ஆட்சி ஏற்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சிவகங்கையில் மட்டுமின்றி, அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை; தூத்துக்குடி கல்வினை கிராமம் பகுதியில் ஏழு வயது சிறுமி படுகொலை; சமுதாயப் பிரச்சினைகளைத் தட்டிக்கேட்ட சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் செல்வராஜ் நகரில் மகேந்திரன் கொலை; சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு வெட்டிப் படுகொலை என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து கொலை – கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு காலத்தில் கூட அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கவலைக்குரியது” என்று பட்டியலிட்டுள்ளார்.

மேலும் அவர், “அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை முழுவதும் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உளவுத்துறைக்கு என்று தனியாகக் காவலர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் ஆய்வாளர்கள் தனியாக இருக்கிறார்கள். சென்னை மாநகரத்திலும் அதே போல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உளவுத்துறை காவலர்கள் இருக்கிறார்கள். மாநகர் சென்னையில் எஸ்.பி. அந்தஸ்தில் தனி உளவுப்பிரிவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் – அல்லது நடைபெறப் போகும் சட்டவிரோத காரியங்கள் – ரவுடிகளின் நடமாட்டங்கள் – சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து. (“அலெர்ட் தகவல்”) தகவல் கொடுப்பதை அ.தி.மு.க. ஆட்சியில் அறவே கைவிட்டு விட்டார்கள்.

இவர்களின் ஒரே வேலை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உளவு பார்ப்பது மட்டுமே என்ற நிலையை அ.தி.மு.க. ஆட்சி உருவாக்கி விட்டது. மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்குப் போலீசாரும் – உளவுத்துறை போலீசாரும் ஏறக்குறைய ஒரே கூட்டணியாக மாற்றப்பட்டு – அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைக் கேட்டால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

போலீஸ் துறையில் நடைபெறும் கீழ்மட்ட மாறுதல்களில் கூட மாவட்ட எஸ்.பி.,க்கோ அல்லது டி.ஜி.பி.,க்கோ அதிகாரம் இல்லாமல்; அனைத்தும் இப்போது அ.தி.மு.க. அமைச்சர்களிடமும், முதலமைச்சர் அலுவலகத்திடமும் போய் விட்டது. அடுத்தகட்டத்தில் எஸ்.பி., டி.ஐ.ஜி., மண்டல ஐ.ஜி ஆகியோரை பரிந்துரை செய்யும் டி.ஜி.பி.,யின் அதிகாரம் இப்போது அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களாக அ.தி.மு.க. நியமித்துள்ள அமைச்சர்களிடம் சென்று விட்டது. முன்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் திறமை மிகுந்து விளங்கிய தமிழ்நாடு காவல்துறை, தற்போது பழனிசாமி ஆட்சியில் முற்றிலும் சீர்குலைக்கப்பட்டு; மக்களைப் பாதுகாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுத் தடுமாறி நிற்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின்.

மேலும் அவர், “அரசியல் வேலைகளைக் கவனிப்பதை விடுத்து – அப்பாவி மக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தமிழகக் காவல்துறையை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு காவல்துறைத் தலைவருக்கும், தலைமைச் செயலாளருக்கும் உள்ளது.

ஆட்சியாளர்கள் இன்று இருப்பார்கள்; நாளை போய் விடுவார்கள்; அது ஜனநாயக அரசியலின் சுழற்சி. ஆனால் காவல்துறை என்பது என்றைக்கும் மக்களின் உண்மை நண்பனாக – தமிழக மக்களின் உறுதிமிக்க பாதுகாவலனாக இருக்க வேண்டிய மிக முக்கியமான துறை. ஆகவே, ஊரடங்கு காலத்தில் நடக்கும் கொலை கொள்ளைகளைத் தடுக்கவும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும் தமிழகக் காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். எஞ்சியுள்ள சில மாதங்களுக்காவது அ.தி.மு.க.,வினரின் குறுக்கீடுகள் இன்றி காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும்” என்றுன் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share