தமிழகச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 2,171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாளான மார்ச் 19ஆம் தேதி வரை ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவை அனைத்தும் நேற்று (மார்ச் 20) பரிசீலனை செய்யப்பட்டன. இதில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் முதலில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
இதனால் நேற்று தமிழகம் முழுவதும் வேட்பு மனு பரிசீலனை செய்யும் அலுவலகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன. இந்நிலையில், வேட்பு மனு ஏற்பு, நிராகரிப்பு தொடர்பான தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாலை 5 மணி நிலவரப்படி, மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 2,171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 3,663 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,