அதிமுக பொதுக்குழு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் அதிமுக மாவட்டச் செயலாளார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் செய்து வரும் நிலையில்... ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வமே, வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர காவல் ஆணையாளரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று மனுவை நேற்று மாலை அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் பொதுக் குழு நடைபெறும் மண்டபம் பகுதியில் நேற்று மாலை போலீஸார் ஆய்வு நடத்தினார்கள்.
இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தடை கோரும் சட்ட முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமியின் மகன் சுரேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
“அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறாக பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. இவை ரத்து செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நடைபெற்ற அதிமுக உள்கட்சித் தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர். “அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூன் 23 ஆம் தேதி கூட்டப்பட்டிருக்கிறது. கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறது. எனவே பொதுக்குழுவை அவர்கள் கூட்ட தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர். அந்த வழக்கு நேற்று (ஜூன் 21) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது... ராம்குமார் ஆதித்தன், சுரேஷ் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், “இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்கிறோம். அதனால் வழக்கை ஜூன் 22 ஆம் தேதி விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதியும் இவ்வழக்கை இன்று விசாரிக்கிறார்.
இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் இன்று (ஜூன் 22) விசாரணைக்கு வருகிறது.
உயர் நீதிமன்ற, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகள் பொதுக்குழு கூடுமா கூடாதா என்ற கேள்விக்கு பதிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-வேந்தன்