எம்.ஜி.எம் குழுமம் 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தீம் பார்க், மதுபான ஆலை, ஹாஸ்பிடாலிட்டி எனப் பல தொழில்களில் ஈடுபட்டு வரும் எம்.ஜி.எம் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து வருமான வரித் துறை சோதனையில் இறங்கியது. வருமான வரித் துறையினர் 15.6.2022 அன்று இக்குழுமத்தில் சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்பட 40-க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையின்போது பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. போலி ரசீதுகளைக் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்து ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொருள்கள் விநியோகிப்போருக்குக் காசோலை வழங்கி பின்னர் அதைப் பணமாகப் பெற்றுக்கொண்டு கணக்கில் வராத முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து கண்டறியப்பட்டது. சோதனை நடவடிக்கையின் மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ.3 கோடி ரொக்கமும், ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் கீழ் தொழிலதிபர் எம்.ஜி.எம் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.216.4 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
அதுபோன்று, டிசம்பர் 2021இல், அமலாக்கத் துறை ரூ. 293.91 கோடி மதிப்புள்ள சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999இன் கீழ் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**