முதல்வருக்கு காய்ச்சல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாளை (ஜூன் 20) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (ஜூன் 21) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த சூழலில் முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே இந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இவற்றிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று (ஜூன் 19) காலை எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சிவிஎம் அண்ணாமலை கொள்ளுப்பேரன் தமிழ் திரையன் திருமணம் முதல்வர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சிக்கும் முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மட்டும் சென்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுபோன்றே சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்கும் அவர் செல்லவில்லை.
-பிரியா