மீன்பிடி தடைகாலம்: அரசுக்கு மநீம கோரிக்கை!


மீன் பிடி தடை காலத்தில் பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
இந்தசூழலில், தடைகாலத்திலும் கடலில் பாலைமீன் குஞ்சுகளை மீன்வளத் துறை அனுமதியுடன் பிடித்து தனியார் பண்ணைகளுக்கு சிலர் விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில், “91 நாள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் சோனஸ் எனும் பாலை மீன் குஞ்சுகளை மீன்வளத்துறை அனுமதியுடன் பிடித்து தனியார் பண்ணைகளுக்குச் சிலர் விற்பனை செய்துவருவதாக ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது கடல் வளத்தைப் பாதிக்கும். பாலை மீனை உண்ண வரும் பெரிய மீன்களின் வரத்து குறைந்து மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தவிர, தடைக்காலம் என்பது அரசுக்கும், மீனவர்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கவேண்டும். தடைக்காலம் முடியும் வரை பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து வணிகம் செய்வதை மீன்வளத்துறை நிறுத்தி வைப்பதைப் பரிசீலிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
-பிரியா