துணைவேந்தர்கள் நியமன மசோதா: ஆளுநருக்கு அனுப்பி வைப்பு!

தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா ஆளுநர் மாளிகைக்கு நேற்று (ஏப்ரல் 26) அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் குஜராத், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான சட்ட மசோதாவை ஏப்ரல் 25ஆம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சட்டத் துறையிலிருந்து இந்த மசோதா முதல்வரின் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலாளரின் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த மசோதா நேற்று ஆளுநரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னர் தமிழகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வரும்.
ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டுக்காக ஆளுநர் சென்றுள்ள நிலையில் இங்கு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா