நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வரும் 27ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து வந்த நிலையில் சனிக்கிழமை(ஏப்ரல் 23) நிலவரப்படி, 2,527 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,079 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கோவிட் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு குறைவாக உள்ளது என்றாலும் சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக அதிகரித்துள்ளது. அதுபோன்று டெல்லியை பொறுத்தவரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மீண்டும் கொரோனா எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அதில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை மேம்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**