தமிழகம் முழுவதும் சில மணி நேரம் மின்வெட்டு: ஏன்?


நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி இரவு சென்னை மாநகரம் உட்பட தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகள் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் சில மணி நேரம் தடைபட்டது.
கோடை வெப்பத்தால் தகித்துகொண்டிருந்த மக்கள், இந்த திடீர் மின்வெட்டால் கடும் அவதிக்கு உள்ளாகினர். பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தத்தமது பகுதிகளில் தொடர்ந்து சில மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அரசின் மீது கடும் விமர்சனத்தோடு பகிர்ந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு தகவலை வெளியிட்டார்.
"இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கிராமப்புறங்களில் பல இடங்களில் நேற்று இரவு நெடுநேரம் வரை மின்சாரம் இல்லாத நிலையே நீடித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஃபேஸ்புக் சமூகதளப் பக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்ப்பகுதி முதல் கிராமப்புறங்கள் வரை நேற்று இரவு நெடு நேரம் மின்சாரம் தடைபட்டது பற்றி அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
வேந்தன்