ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் வரி: ப.சிதம்பரம்


பாஜக அரசின் இந்த 8 ஆண்டுக் கால ஆட்சியில் 26 லட்சம் கோடி ரூபாய் எரிபொருள் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் மற்றும் சிலிண்டர் மீதான விலை 137 நாட்களுக்குப் பிறகு கடந்த 14 நாட்களாக உயர்ந்து வருகிறது. உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலும் பெட்ரோல் விலை இந்தியாவில் உயர்த்தப்படவில்லை. எனினும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில் கடந்த 14 நாட்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து ரூ.109.34க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோன்று டீசல் விலை 38 காசுகள் உயர்ந்து ரூ.99.42க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே தினம் தினம் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மோடி அரசின் இந்த எட்டு ஆண்டுகளில் எரிபொருள் வரியாக மத்திய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் இருக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மத்திய அரசு சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் எரிபொருள் வரியாக வசூலித்துள்ளது. ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாகச் செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
-பிரியா