தேர்தல் முறைகேடு -வழக்குத் தொடருவோம்: ஈபிஎஸ்

உள்ளாட்சித் தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக புள்ளிவிவரங்களை எடுத்து வழக்குத் தொடருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து இன்று (மார்ச் 24) வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில், வெள்ளிக் காசு, தங்கக் காசு, பணம், ஹாட் பாக்ஸ் ஆகியவற்றைக் கொடுத்தும் , கொரோனா நோயாளிகளுக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
2011ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் அதிமுக 71.34% வாக்குகள் பெற்றது. திமுக வெறும் 15.85 % தான் பெற்றது. ஆனால் தற்போது இந்த தேர்தலில், 12 கட்சிகள் உள்ளடக்கி மாநகராட்சிகளில் 43.59% வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனால் எந்தக் கூட்டணியும் இல்லாமல் அதிமுக 24% வாக்குகளைப் பெற்றுள்ளது. அப்படிப் பார்த்தால் அதிமுக வலிமையாகத்தான் இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை எடுத்து, தேர்தலில் நடந்த முறைகேடு குறித்து வழக்குத் தொடரப்படும்” என்று தெரிவித்தார்.
-பிரியா