ந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை தமிழகத்தில் தான் அதிகளவு நடைபெறுவதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று, மாநிலங்களவையில் எழுத்து மூலம் சாலை விபத்து தொடர்பாகப் பதிலளித்த அமைச்சர் நிதின்கட்கரி, “2018ஆம் ஆண்டு 4,67,044 விபத்துக்கள் நடந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அது 3,66,138 ஆகக் குறைந்துள்ளது. அதே போல 2018ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 1,51,417 பேர் உயிரிழந்தனர். 2020ஆம் ஆண்டு 1,31,714 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்” என்றார்.
2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்துக்கள் குறித்து மாநில வாரியாக பட்டியலை வெளியிட்ட அவர், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 8,059 பேர் உயிரிழந்துள்ளனர். 50,551 பேர் காயமடைந்துள்ளனர். புதுச்சேரியைப் பொறுத்தவரை 969 விபத்துக்களில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். 1,019 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இது குறைவு தான்” என்றார்.
அவர் கொடுத்த பட்டியல் படி தமிழகத்தில் 2018ல் 63920 விபத்துகளும், 2019ல் 57228 விபத்துகளும், 2020ல் 45484 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதில் 2018ல் 12216 உயிரிழப்புகளும், 2019ல் 10525 உயிரிழப்புகளும், 2020ல் 8059 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும்.
**-பிரியா**