குமரி விசிட்: ஸ்டாலின் மெசேஜ்!


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய குடும்ப நண்பரான சுரேஷ்ராஜன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தமிழகமெங்கும் திமுகவில் அதிர்வை ஏற்படுத்தியது.
அதேநேரம் சுரேஷ் ராஜனை முதல்வர் கைவிடமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
மார்ச் 4-ஆம் தேதி சுரேஷ்ராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, நேற்று மார்ச் 7ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று மாலை 3. 45 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த முதல்வரை, மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் வரவேற்பதற்காக மாவட்ட அமைச்சர் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ், உள்ளிட்ட பல நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்களோடு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுரேஷ் ராஜனும் கையில் சால்வையோடு காத்திருந்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தகத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலினை குமரி மாவட்டத்துக்குள் வரவேற்றார். குமரி மாவட்டத்தில் வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளும் அங்கு காத்திருந்தனர்.
ஆனால் நேரமில்லை என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியை சுருக்கமாக முடித்துக் கொண்டு முதல்வர் புறப்பட்டார்.
முதல்வரோடு வந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழியாக சுரேஷ்ராஜனிடம், 'போய் முதல்ல பொதுச்செயலாளரைப் பாருங்க' என்று சொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தனர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினர்.
ஆரல்வாய்மொழியில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்ட பணிகள், பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயில் ராட்சத இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்ட பணிகள், குமாரகோவில் – பத்மநாபபுரம் புத்தனார்
கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமரிவரை முதல்வரை சந்தித்து தனது செல்வாக்கை நிலை நிறுத்தலாம் என சுரேஷ்ராஜன் நினைத்திருந்த நிலையில்... அவரை சந்திக்க மறுத்ததோடு கட்சி ரீதியாக தன் மேல் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்வினையாக, வேண்டுமென்றால் பொதுச்செயலாளரைதான் பார்க்க வேண்டும் தன்னை அல்ல என்று அறிவுறுத்தியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த பயணத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜின் மாவட்ட அரசியல் செல்வாக்கை உயர்த்தி விட்டு சென்றுள்ளார் ஸ்டாலின்.
வேந்தன்