நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று (ஜனவரி 31) வெளியிட்டது.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், கடலூர் மாநகராட்சி, தர்மபுரி,விழுப்புரம் மாவட்டங்களில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில்லை. தனித்துப் போட்டியிடவுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்தச்சூழலில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக வெளியிட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,