குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!


காங்கிரசுக்குள் எந்தெந்த வகையில் குழப்பங்களை ஏற்படுத்த முடியுமோ, அவ்வளவு வகைகளிலும் குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறது ஆளும் பாஜக.
இதில் லேட்டஸ்டாக பத்மபூஷன் விருதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் ஆச்சரியப்படும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
குலாம் நபி ஆசாத் காங்கிரசுக்குள் சோனியா -ராகுலை எதிர்க்கும் 23 தலைவர்களில் முக்கியமானவர். கட்சிக்குள் அமைப்பு மாற்றங்கள் வேண்டும், தேர்தல் நடத்தப்பட வேண்டும் கோரிக்கைகளை முன்வைத்து தலைமைக்கு கடிதம் எழுதிய இருபத்தி மூன்று தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.
ஏற்கனவே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி விவாதம் வெடித்தபோது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார், 'காஷ்மீரில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மோடி அரசு கைது செய்யும் போது குலாம் நபி ஆசாத்தை மட்டும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் 2020 ஆகஸ்ட் 30 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பாஜகவோடு ரகசிய தொடர்பில் இருக்கும் தலைவராகவே குலாம் நபி ஆசாத் காங்கிரசுக்குள் கருதப்பட்டு வந்தார். அவர் ராஜ்யசபா எம்பி பதவியிலிருந்து ஓய்வு பெறும் போது பிரதமர் மோடி ஆற்றிய சென்டிமென்ட் உரை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
இந்தப் பின்னணியில்தான் குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் குலாம் நபி ஆசாத்துக்கு இதுவரை முறையான வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் அந்த 23
புரட்சித் தலைவர்களில் சிலரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா, கபில் சிபல், ராஜ் பாபர் போன்றோர் குலாம் நபி ஆசாத்தை பத்ம பூஷன் விருதுக்காக வாழ்த்தி உள்ளனர்.
இதிலும் கபில்சிபல் குலாம்நபி ஆசாத்துக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், " பத்மபூஷன் விருதுக்காக
வாழ்த்துக்கள் குலாம். கொடுமை என்னவெனில் குலாம் நபி ஆசாத் பொதுவாழ்வு பங்களிப்புக்காக தேசம் அவரை அங்கீகரிக்கும் போது... குலாமின் பணி காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லாமல் போய்விட்டது" என்று குறிப்பிட்டுள்ளார் கபில் சிபல்.
இதே நேரம் பாஜக அரசின் பத்ம விருதை பெறும் வகையில் செயல்பட்டுள்ளார் என குலாமுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து விமர்சனங்களும் வெளி வந்துள்ளன.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய பாஜக அரசின் பத்ம விருதை ஏற்க மறுத்ததை குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளார்.
அதில், "புத்ததேவ் சரியானதை செய்துள்ளார். அவர் விடுதலையாளனாக இருக்க விரும்பியிருக்கிறார். குலாமாக அல்ல" என்று ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசாத் என்ற வார்த்தைக்கு விடுதலை என்று பொருள். குலாம் என்பதற்கு அடிமை என்று பொருள். ஒரே பெயரில் அடிமையும் விடுதலையும் கொண்டிருக்கும் குலாம்நபி ஆசாத்தின் பெயர் ஜெய்ராம் ரமேஷால் சுவாரசியமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது
இந்த சூழலில் குலாம் நபி ஆசாத் விரைவில் பாஜகவுக்கு சென்றுவிடுவார் என்று தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில்... "எனது ட்விட்டர் அடையாளக் குறிப்பில் நான் எதையும் மாற்றவில்லை. ஏற்கனவே இருந்ததுதான் அப்படியே தொடர்கிறது"என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதற்காகத்தான் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது என்ற விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து வருகின்றன.
ஆரா