உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சி இட ஒதுக்கீடு!

ஜனவரி 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்கு இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நாளை (ஜனவரி 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அரும்பாக்கம், ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கும், 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பொதுப் பிரிவினருக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமுள்ள வார்டுகளில் 100 வார்டுகளில் பெண்கள் மட்டும் போட்டியிடவுள்ளனர்.
3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200 வார்டுகள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கும், 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சென்னை உட்பட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா