சென்னை பழவந்தாங்கலில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் இஸ்பாகான் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த கருத்தரங்கின் செயல்திட்ட பரிந்துரை அறிக்கையில் தமிழகத்தின் தொழில் காப்பகங்கள் மேம்பாட்டுக்கான செயல்திட்டங்கள், சவால் மிகுந்த புதிய சூழலில் தொழில்களுக்கான பரவலாக்கப்பட்ட செயலாக்க மாதிரிகள், பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு கொள்கைகளில் புத்தொழில் உருவாக்கம் மற்றும் காப்பகங்களை இணைத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது வெறும் அறிக்கைகளாக மட்டும் இருந்துவிடாமல் , குறிப்பிடத்தக்கப் பலன்களை நடைமுறையில் உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு என்பது கல்வியில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைந்த ஒரு மாநிலம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இளைஞர்களின் அறிவு சக்தியாகும்.
உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பயின்ற திறமைமிக்க இளைஞர் சக்தி தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம் உள்ளன.
இந்த சூழலில் தமிழகத்தில் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 நிறுவனங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஆண்டுகளில் இந்த உதவி அதிகரிக்கப்படும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தாக்க பூங்காக்களை உருவாக்கும் செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 60 நிறுவனங்களில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள சிறு நிறுவனங்களிலும் முதலீடுகளை அதிகம் பெற்றுள்ளோம். வரும் நாட்களில் தமிழகம் புத்தாக்க தொழில் முனைவோரின் பணத்தோட்டமாக மாறும் என்று உறுதி அளிக்கிறோம்.
உலகின் நான்காம் தொழில் புரட்சி தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி வாகனங்கள், தொழில் வழி மருத்துவம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கேற்ப நமது சிந்தனை இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைச் சமூகநீதியின் அளவுகோலாகப் பார்க்கிறோம். தமிழகத்தில் 2030க்குள் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பினை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த உறுதி ஏற்று உள்ளேன். இது சாத்தியமாக ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும்.இந்த முயற்சிகளுக்குத் தமிழக அரசும் துணை நிற்கும்” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,”