வேகமெடுக்கும் கொரோனா: மத்திய அரசு அவசரக் கடிதம்!

politics

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், ”கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரான் காரணமாக பல்வேறு நாடுகளில் தொற்றின் பரவல் புதிய எழுச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 70 நாட்களில் இல்லாத அளவுக்கு டிசம்பர் 31ஆம் தேதியன்று 16,764 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுபோன்று ஐரோப்பா,அமெரிக்காவிலும் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வைரஸின் அதிவேக பரவலைக் குறிக்கிறது.

திடீர் தொற்று அதிகரிப்பு, விரைவில் சுகாதாரக் கட்டமைப்பு மீது நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், முன்னெச்சரிகை நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளும் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளை ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் முந்தைய கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கண்காணிக்க, சிறப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட வாரியாக கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அனைத்து சுகாதார நிலையங்களிலும் தேவையான மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது தவிர, ஆக்ஸிஜன் இருப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *