இந்தியாவில் நாம் 2021 ஆண்டிலிருந்து விடைபெற தயாராகி கொண்டிருக்கும் நிலையில், நியூசிலாந்து மக்கள் வானவேடிக்கையுடன் 2022 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டனர்.
ஒவ்வொரு நாடும் புத்தாண்டை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில், உலகிலேயே ஆண்டுதோறும் நியூசிலாந்து நாட்டு மக்கள் முதலிலேயே புத்தாண்டை வரவேற்பார்கள். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் ஏழரை மணி நேரம் இடைவெளி உள்ளதால், நமக்கு மாலை 4.30 மணி ஆகும்போது அவர்களுக்கு நள்ளிரவு 12 மணி தொடங்கிவிடும். அதனால் இன்று 4.30 மணிக்கே நியூசிலாந்து மக்களுக்கு ஜனவரி 1 2022 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.
ஆக்லாந்து நகரின் முக்கிய இடமான ஸ்கை டவரில், புத்தாண்டின் இரண்டு நிமிடத்துக்கு முன்பிலிருந்து கவுண்ட் டவுன் டிஸ்பிளே செய்யப்பட்டது. கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் வான வேடிக்கைகளை வெடித்து கொண்டாடினர். அதுபோன்று ஹார்பர் பிரிட்ஜ் உள்ளிட்ட ஆக்லாந்தின் முக்கிய நகரங்களில் கண்களை கவரும் வானவேடிக்கை வெடித்து கொண்டாடப்பட்டது. தேவலாயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற ஆக்லாந்து மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டின் அன்பின் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இங்கிலாந்து,பிரான்ஸ் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. நியூசிலாந்தில் இதுவரை ஒமிக்ரானின் சமூகப் பரவல் ஏற்படவில்லை என்றாலும், பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதால் மக்கள் கட்டுப்பாட்டுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 6 மணியளவில் ஆஸ்திரேலியாவிலும் 2022 ஆம் ஆண்டை பாடல் பாடியும், கேக் வெட்டியும், வானவேடிக்கைகளை வெடித்தும் மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து இரவு எட்டரை மணிக்கு ஜப்பான் புத்தாண்டை கொண்டாடவுள்ளது.
இந்தியாவில் இரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறக்கும். ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் குடும்பத்தினருடன் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
**-வினிதா**
�,