கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓர் அதிகாரியின் வீட்டுத் தண்ணீர் குழாயை உடைத்துப் பார்த்ததில் பணம் கட்டுகட்டாகக் கொட்டியதைப் பார்த்து அதிகாரிகளே மலைத்து போய் நின்றுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் கல்புர்கியில் உள்ள குப்பி காலனியில், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் சந்தன கவுடா பிரதார் வீடு உள்ளது. சந்தன கவுடா பிரதார் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அவரது வீடு முழுவதும் சோதனை செய்த அதிகாரிகள், வீட்டின் வெளியே இருந்த பைப்புகளிலும் சோதனை செய்தனர். இதில் சுவருடன் ஒட்டப்பட்டிருந்த பைப்பில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிளம்பரை வரவழைத்து பைப்பை உடைத்து பார்த்ததில், தண்ணீருக்குப் பதிலாக கட்டு கட்டாக பணம் கொட்டியுள்ளது.
ACB officials seize Rs 13 lakh cash from a drain pipe from the home of a junior engineer in the PWD Department in Kalaburagi #Karnataka. pic.twitter.com/uA7d4V27Fp
— Nitin B (@NitinBGoode) November 24, 2021
மொத்தம் 13 லட்சம் அந்த பைப்பில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அதனுடன் சேர்த்து அவரது வீட்டிலிருந்து ரூ.54 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு மஞ்சள் கலர் பக்கெட்டில் தண்ணீரைப் பிடிப்பது போல் அதிகாரிகள் பணம் கொட்டுவதைப் பிடித்துக்கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.
இவரது வீட்டில் நடத்திய சோதனை போன்று மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
**-பிரியா**
�,”