வேதா இல்ல தீர்ப்பு விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து அவரது அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேஷசாயி, வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது. வேதா இல்லத்தைக் கையகப்படுத்த நீதிமன்றத்தில் செலுத்திய ரூ. 67.9 கோடி இழப்பீட்டுத் தொகையை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்தால், அதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தீபா தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைவாசிகள் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு கூடத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளார்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தவறு செய்யும் இளம் சிறார்களைத் திருத்த முடிந்த அளவிற்குச் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிச் செல்லும் சிறுவர்களைக் கண்டுபிடித்து விடுகிறோம். அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.
**-பிரியா**
�,