தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால், ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/- வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று(நவம்பர் 24) மதியம் வரை 8 டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் பின்வரும் விவரப்படி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
ஒரு கிலோ தக்காளி ரூ.79,
உருளைக்கிழங்கு ரூ.38
வெண்டைக்காய் ரூ.70,
சுரைக்காய் ரூ.43
பீட்ரூட் ரூ.40,
பீன்ஸ் ரூ.70,
கோஸ் ரூ.28
கொத்தமல்லி ரூ.15
புதினா ரூ.4
பச்சை மிளகாய் ரூ.32
கத்தரிக்காய் (வரி) ரூ.65,
கத்தரிக்காய் (உ) – ரூ.68,
சவுசவ் – ரூ.20,
நூக்கல் ரூ.42,
வெள்ளரிக்காய் ரூ.15,
முருங்கைக்காய் ரூ.110
என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்கிறது. தக்காளி அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டிருப்பது, மழை காரணமாக தக்காளி பறிக்கும் சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் தக்காளி விலை உயர்வு தற்காலிகமாக ஏற்பட்டுள்ளது. இது நிரந்தரமானது அல்ல. மழை இல்லாத மகாராஷ்டிராஉள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.
**-வினிதா**
�,