மாரியப்பனுக்கு அரசுப் பணியாணை வழங்கிய முதல்வர்!

politics

பாராலிம்பிக் வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு அரசுப் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 3) வழங்கினார்.

சேலம் மாவட்டம் பெரியவடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான தங்கவேலு மாரியப்பன், ஆண்களுக்கான சர்வதேச உயரம் தாண்டும் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று ரியோ, பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2016 ல் தங்கப் பதக்கமும், இந்தோனேசியாவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கமும், துபாயில் நடைபெற்ற உலக பாராதடகள சாம்பியன்ஷிப் 2019ல் வெண்கல பதக்கமும், இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

வெள்ளிப்பதக்கம் வென்றதை அடுத்துக் கடந்த மாதம் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தங்கவேலு மாரியப்பன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘முதல்வரிடம் கிளாஸ் 1 வேலை கேட்டுள்ளேன். நிச்சயம் எனது வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தங்கவேலு மாரியப்பனுக்கு, அவரின் சர்வதேச விளையாட்டு சாதனைகளைக் கருத்தில் கொண்டு அவரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் (விற்பனை) பதவிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிபிஏ பட்டதாரியான தங்கவேலு மாரியப்பன் தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் தடகளப் பிரிவில் முதுநிலை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *