நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு கூறியுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக இருந்த மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில், பொது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சமும் அதிகமாக இருந்தது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் 2021 ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஓய்விலிருந்த அவர் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தடுப்பூசி போட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சம் அதிகரித்தது. இதனால் விவேக் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், விவேக் மரணம் தடுப்பூசி தொடர்பானதல்ல என்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது. விவேக்கின் மரணம் தற்செயலானது என்றும் அவரது மரணத்துக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் சம்மந்தமில்லை. உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் இந்த நோய்த்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
விவேக்கின் எக்மோ மற்றும் ஈசிஜி அறிக்கைகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த இரு குழுக்களும் விவேக் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என ஒரே மாதிரியான முடிவைத் தெரிவித்ததாகவும் தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,